உ
திருச்சிற்றம்பலம்.செங்காராத்திமோட்டைப் பிள்ளையார் திருவிருத்தங்கள்.
காப்பு
அகரமாய் உகரமாய் மகரமாய் உருவான ஓம்காரமான பொருளே
விகடமாம் வதனமாய் விரும்பியே போற்றிடும் வேதத்தின் முதன்மை உருவே
முகமான பிரணவ ஒளியினை வீசிடும் மூத்தவனான பிரானே
மிகமிக உருகியே வேண்டினேன் செங்கார ஆத்திமோட்டையினிலுறையும்
தகதக ஒளிவிடும் கிரீடத்தைத் தாங்கிய தந்திமுக ரூபனே எம்
அகத்திலே ஆணவம் தொடர்கின்ற கன்மமும் மாயையாயான மலமும்
இகத்திலே போக்கியே எம்மை நீகாப்பாற்றி வௌ;வினையறுத்தருளியே
பகன்றிடும் பாமாலை இதற்கு நீகாப்பாகப் பணிந்துனை வேண்டினேனே.
கோவில்சூழல் அழகு
1. திருமருது அருகாகச் சோலையாய்ச் சூழ்ந்திடும் செங்கார ஆத்திமோட்டை
பெருநாவல் மரத்தோடு பேரித்திமரங்களும் இருளாய் நிழல் பரப்ப
மருங்காக வளர்கொன்றை சரமாக மலர்சொரிய வண்டு தேனுண்டுபாட
கருங்குயில்கள் விரும்பியே கனிகளைக் கோதியே களிப்போடு தொடர்ந்துகூவ
நெருங்கிய பனிச்சை விருட்சங்கள் பழம்சொரிய நெடியவால் மந்தி தாவ
அருங்காட்சி கண்ணுக்கு இயற்கையளித்தருளும் அழகான சூழல்தன்னில்
அருகாகவளர் குளக்கட்டின் கீழ் கோவில்கொள் ஆத்திமோட்டைப்பிள்ளையார்
வருபக்தர் யாவரதும் வேண்டுதல் நிறைவேற்றி மகிழவைக்கும் தெய்வமே.
2. அடப்பமரங்கள் நிறைந்து விளங்கிடும் ஆத்திமோட்டைக்குளத்துள்
படர்ந்திட்ட ஒலுச்செடி பூ+த்துச்செழித்து நற்பால்வண்ண மலர்களோடு
இடைக்கிடை செந்நிறப்பூக்கள் மலர்ந்துமே எழிலுக்குஅழகூட்ட
அடர்ந்த அடப்பம் கிளைகளில் வெண்கொக்கு நிறைந்து பரந்திருந்து
அடைகாக்கக் கூடுகள்கட்டுதற்காகவே ஆரவாரிக்கும் ஓசை
நடைபெறும் பிள்ளையார் பூசைக்குச் சல்லரி தாள மேளங்கள் போல
இடைவிடா நிகழ்கின்ற ஆராதனைகள் போல் இயற்கையளித்த வரமே
மடைபாயும் செங்கார ஆத்திமோட்டைக்குளப் பிள்ளையாரின் கோவிலே.
கோவில் சிறப்பு
3. செங்கார ஆத்திமோட்டைக்குளம் தன்னிலே சீருற நீராடியே
ஓங்கார ரூபனாம் ஆத்திமோட்டைக்குளப் பிள்ளையார் கோவிலண்டை
ஓங்கிவளர் கொன்றையிலோ அருகில்வளர் அலரியிலோ முறையாகப் பூப்பறித்து
பாங்காகக் கோவிலைச்சுற்றியே வலம் வந்து பிள்ளையாருக்கர்ச்சித்து
தேங்காய்ப்பழம் பாக்கு வெற்றிலை முப்பழம் தித்திக்கும் மோதகமும்
ஆங்கேமடைபரப்பி ஆராத்தி தீபமுடன் தூபவாசனையும் காட்டி
நீங்காத நினைவுடன் நெஞ்சினில் நிறுத்தியே ஆத்திமோட்டையப்பனை
அட்டாங்கமாக விழுந்து வணங்கவே அகலுமே தீவினைகளே.
4. வருவோரும் போவோரும் பயணப்படுவோரும் ஆத்திமோட்டையப்பனின்
திருவான சந்நிதி முன்னின்று தம்முடைகாரியம் கைகூடவே
இருகைகள்கூப்பியே இதயத்தில் எண்ணியே நேர்த்தியை நேர்ந்துகொண்டே
கருமத்தைத் தொடங்கிடக் காணலாம் பெருவெற்றி கண்ணினால்கண்ட மெய்யே
அருகான சிற்றூர்கள் உள்ளோர்கள் யாவர்க்கும் கண்கண்ட குலதெய்வமாய்
வருதொல்லையாவையும் நீக்கியே வளர்த்திடும் மந்தைகள் தன்னையும் காத்துமே
விருப்போடு gf;jர்செய் பூசையையேற்றுமே இன்பமாயவiu;வாழ்விப்பதே
பெருமைபெறு செங்கார ஆத்திமோட்டைக்குளப் பிள்ளையாரின் புதுமையே.
5. சரித்திர முற்பட்ட காலத்தில் தோன்றிய செங்கார ஆத்திமோட்டை
விரித்தியான செந்நெல் வயல்கள் நிறைந்திட்ட சிங்கார அழகுமோட்டை
பரித்திட்ட பரிகலங்கள் சூழ்ந்த பிள்ளையார் இருந்திட்ட இன்பக்கோட்டை
வரிந்திட்ட நாச்சிமார் வாலபூரணியோடு அட்டலக்குமியும்கூடி
இருந்திடும் காளியொடு ஒலுக்கொட்டை வைரவன் உறுதியாயுற்றஐயன்
மறந்திட்ட பற்பல தேவதைகூடியே மாண்பாகக் கோவில் கொண்ட
அறம்பொங்கும் அழகுடை சிற்றூர்கள் சூழ்ந்த நல் ஆத்திமோட்டையப்பனை
கரம்கூப்பித்தொழுதிட நீங்குமே துன்பங்கள் கவலைகள் எல்லாமுமே.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment